முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
முல்லைப்பாட்டு

பாடியவர்:- காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடப்பட்டவன்:- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை:- முல்லைத்திணை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 103
சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்
சங்கத்தமிழ்
முல்லைப்பாட்டு

பாடியவர்:- காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடப்பட்டவன்:- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை:- முல்லைத்திணை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 103
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.
முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.
இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு.
- 01. மால் போலத் தோன்றும் மழை மேகம் (1-6)
- 02. முதுபெண்டிர் விரிச்சி கேட்டல் (7-11)
- 03. முது பெண்டிர் ஆய்மகளின் நற்சொல் கேட்டலும் தலைவியை ஆற்றுவித்தலும் (12-23)
- 04. பாசறை அமைத்தல் (24-28)
- 05. பாசறையின் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை (29-36)
- 06. பாசறையில் வீரர்களின் அரண்கள் (37-42)
- 07. பாசறையில் மன்னனுக்குத் தனி இடம் (43-44)
- 08. மன்னனின் இருப்பிடத்தில் விளக்கேற்றும் பெண்கள் (45-49)
- 09. பாசறையில் காவலாளர் (50-54)
- 10. நாழிகைக் கணக்கர் (55-58)
- 11. மன்னன் இருப்பிடத்தில் யவனர் (59-63)
- 12. மன்னனின் பள்ளியறையில் மிலேச்சியர் (63-66)
- 13. பாசறையில் மன்னனின் மனநிலை (67-76)
- 14. வெற்றிக்குப் பின் பாசறையில் மன்னன் (77-80)
- 15. தலைவனைக் காணாது வருந்தும் தலைவியின் நிலை (80-89)
- 16. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் வருதல் (89-92)
- 17. கார்ப்பருவத்தில் முல்லை நிலம் (92-100)
- 18. வந்து கொண்டிருக்கின்றது அரசனின் தேர்! (101-103)
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி, . . . .[5]
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி . . . .[5]
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
பொருளுரை:
முல்லைத்திணைக்கு உரிய முதற்பொருளாகிய கார்காலப் பெரும்பொழுதும், மாலைக்காலச் சிறுபொழுதும் முல்லைப்பாட்டின் தொடக்கமாக அமைந்துள்ளது. திருமால் அகன்ற உலகை வளைத்துக்கொண்டுள்ளான். சுழலும் திகிரிச் சக்கரத்தையும், சங்கையும் கைகளில் ஏந்திக்கொண்டுள்ளான். (வள்ளல் மாபலி) வார்த்த நீரை வாங்கிக்கொண்டு நிமிர்ந்தான் (விசுவரூபம்). அந்தத் தோற்றம் போல, கடல்நீரைப் பருகி எழுந்த மழைமேகம் பெருமழை பொழிந்தது (கார்காலம்). மழை பொழிந்த மாலை நேரம்.
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, . . . .[10]
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச், . . . .[7 -11]
யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது . . . .[10]
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
பொருளுரை:
கட்டுக்காவல் மிக்க பழமையான ஊர். அந்த ஊருக்கு வெளிப்புறம் பெருமுது பெண்டிர் (35 அகவை தாண்டிய மகளிர்) சென்றனர். நாழியில் கொண்டு சென்ற நெல்லையும், வண்டுகள் மொய்க்க மலரும் புத்தம்புது முல்லைப் பூவையும் தூவினர். விரிச்சிக்காகக் காத்திருந்தனர். (விரிச்சி என்பது பிறர் வாயிலிருந்து விரியும் பேச்சுக் குரல்)
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர, . . . .[15]
இன்னே வருகுவர் தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள், தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது, நீ நின் . . . .[20]
பருவரல் எவ்வம் களை மாயோய், எனக்
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்பக், . . . .[12 - 23]
னுறுதுய ரலமர னோக்கி யாய்மக
ணடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர . . . .[15]
வின்னே வருகுவர் தாய ரென்போள்
நன்னர் நன்மொழி கேட்டன மதனா
னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருத றலைவர் வாய்வது நீநின் . . . .[20]
பருவர லெவ்வங் களைமா யோயெனக்
காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்
பொருளுரை:
ஆய்மகள் பச்சைக் கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றிலே தொடுத்து வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக்கொண்டிருந்தது. அந்தக் கன்றின் கழுத்தை அந்த ஆய்மகள் தன் கக்கத்திலே அணைத்துக்கொண்டு அதனைத் தேற்றும் சொற்களைப் பேசினாள். “கையில் வளைகோல் வைத்திருக்கும் கோவலர் பின்னிருந்து ஓட்டிக்கொண்டு வர உன் தாயர் (தாய்ப்பசு) இன்னே (இப்பொழுதே) வந்துவிடுவர்” என்றாள். [இந்த நல்ல சொற்கள் விரிச்சி கேட்டுக்கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது. இதுவே அவர்கள் கேட்ட வரிச்சி]
“இது நல்லவர் வாயிலிருந்து வந்த ‘புள்’ சகுனம். பகைவரைப் போர்முனையில் வென்ற தலைவர் தாம் மேற்கொண்ட வினை முடிந்து அவ்வர்கள் தந்த திறையுடன் வருவது உறுதி. மாயோய்! (மாயோன் எனபதன் பெண்பாற் பெயர். முல்லைநிலப் பெயர். பசுமையான மாந்தளிரின் மாமை நிறம் கொண்டவள்) உன் கவலையைப் போக்கிக்கொள்” என்று விருச்சியைக் கேட்கும்படி பெண்கள் தலைவனைப் பிரிந்திருந்த மாயோளுக்குக் காட்டினர். அச் சொற்களைக் கேட்ட பின்னரும் மாயோளின் பூப்போன்ற கண்களிலிருந்து அவள் புலம்பும் முத்துக்ககள் உதிர்ர்ந்தன.
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, . . . .[25]
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுள் புரிசை ஏமுற வளைஇப்,
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி. . . . .[24 - 28]
சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி . . . .[25]
வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி
பொருளுரை:
பகைப்புலம் சென்ற தலைவன் பாடிவீட்டில் இருந்தான். அது காட்டாறு பாயும் முல்லைநிலத்தில் இருந்தது. மணம் கமழும் பிடவம் பூச்செடிகள் அழிக்கப்பட்டு அந்தப் பாடிவீடு அமைக்கப்பட்டிருந்தது. வேட்டையாடும் விலங்குகள் அதில் நுழையாவண்ணம் முள்வேலிச் சுற்றுமதில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்தது. காட்டாறு கடல்போல் அகன்றதாய் அதனைச் சுற்றிலும் ஓடும்படிச் செய்யப்பட்டிருந்தது.
கவலை முற்றம் காவல் நின்ற . . . .[30]
தேம்படு கவுள சிறு கண் யானை,
ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன்குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டெனக்,
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றிக் . . . .[35]
கல்லா இளைஞர் கவளம் கைப்பக், . . . .[29 - 36]
கவலை முற்றங் காவ னின்ற . . . .[30]
தேம்படு கவுள சிறுகண் யானை
யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த
வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்
தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் . . . .[35]
கல்லா யிளைஞர் கவளங் கைப்பக்
பொருளுரை:
பாடிவீட்டுத் தெருக்களில் உவலைக்கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன. தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த யானைக்குக் கரும்பையும் கதிர்ரோடு கூடிய நெல்லந்தாளையும் தழைகளையும் உணவாகத் தந்தனர். அவற்றை அந்த யானை தன் கைகளால் வாங்கி உண்ணாமல் தன் நெற்றியைத் துடைத்துக்கொண்டது. அதனை உண்ணும்படி, வடமொழிச் சொற்களைச் சொல்லி, கையில் கவைமுள் அங்குசம் வைத்திருந்த இளைஞர்கள் பயிற்றுவித்துக்கொண்டிருந்தனர்.
முக்கோல் அசை நிலை கடுப்ப, நற்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றிக்,
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் . . . .[40]
பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணமாக, . . . .[37 - 42]
முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ
ரோடா வல்விற் றூணி நாற்றிக்
கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் . . . .[40]
பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து
வாங்குவி லரண மரண மாக
பொருளுரை:
தலைவனுக்குப் பாதுகாப்பு அரணம் அமைக்கப்பட்டிருந்தது. கல்லில் துவைத்துக் கட்டும் ஆடையை நோன்பிருக்கும் பார்ப்பான் முக்கோல் நடுவில் வைத்திருப்பது போல வில்லும் அம்பறாத் தூணியும் வைக்கப்பட்டிருந்தன. வேல்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணித்திருந்தனர்.
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு. . . .[43 - 44]
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
பொருளுரை:
தலைவனுக்கன்று தனிப் பாடிவீடு இதுந்தது. அது உயர்ந்த தூண் நிறுத்திய அகம். பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்,
நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇக்,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட, . . . .[45 - 49]
திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்க நந்துதொறு மாட்ட
பொருளுரை:
கச்சுடை அணிந்து, முதுகுப்புறம் கூந்தல் புரள, கையில் வளையலுடன் வாளேந்திய மங்கையர் சுரைக்குடுக்கையில் கொண்டுவந்த எண்ணெய்யை இரவினைப் பகலாக்கும் வகையில் எரியும் விளக்குகளில் ஊற்றி சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தனர்.
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்தாங்குத்,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ, (50 -54)
ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்
சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத்
துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
பெருமூ தாள ரேமஞ் செய்ய
பொருளுரை:
நீண்ட நாக்கினை உடைய மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது. பூத்திருக்கும் அதிரல் கொடி சிதைக்கும் காற்றில் ஆடுவது போல, முடி போட்டுப் போர்த்தியிருக்கும் துணி அக்காற்றில் ஆடும்படி பெருமூதாளர் (மெய்க்காப்பாளர்) தலைவனுக்குப் பாதுகாவலாக நடந்துகொண்டிருந்தனர்.
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி,
“எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து” என்று இசைப்ப, . . . .[55 - 58]
டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்ன லினைத்தென் றிசைப்ப
பொருளுரை:
பிழையின்றிக் காலத்தைக் கணித்தறியும் நாழிகைக் கணக்கர் கைகளால் தலைவனை வாழ்த்தித் தொழுதுகொண்டு “உலகம் வெல்ல வந்துள்ளவரே! குறுநீர்க் கன்னல் இத்தனை நாழிகை காட்டுகிறது” என்று இசைப்பாட்டு ஒலியோடு தெரிவித்தனர்.
மெய்ப்பை புக்க, வெருவரும் தோற்றத்து, . . . .[60]
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட, புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி............. . . . .[59 - 63]
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து . . . .[60]
வலிபுண? ரியாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
றிருமணி விளக்கங் காட்டித்........... . . . .[59 - 63]
பொருளுரை:
இடையில் கச்சமாகக் கட்டிய உடை, உடலில் மெய்ப்பைச் சட்டை, அச்சம் தரும் தோற்றம், வலிமை மிக்க உடம்பு, உறுதி கொண்ட நெஞ்சுரம் ஆகியவற்றைக் கொண்ட யவனர் பழகிய புலியை சங்கிலித் தொடரிலிருந்து விடுவித்து அரசன் படுக்கைக்குக் காவல் புரிந்தனர்.
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்,
உடம்பின் உரைக்கும் உரையா நாவின் . . . .[65]
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, . . . .[63 - 66]
ணெழினி வாங்கிய யீரறைப் பள்ளியு
ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் . . . .[65]
படம்புகு மிலேச்ச ருழைய ராக
பொருளுரை:
அரசனின் பள்ளியறை திரையால் இரண்டு அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. ஒருபக்க அறையில் அரசன் படுத்திருந்தான். மறுபக்க அறையில் ஊமை மிலேச்சர் மணிவிளக்கம் வைத்துக்கொண்டு மெய்க்காப்பாளராக விளங்கினர்.
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடிக் கணம் மறந்த வேழம், வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமியத், . . . .[70]
தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்திச்
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும், தோல் துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்,
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒருகை . . . .[75]
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து, . . . .[67 - 76]
தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து
பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் . . . .[70]
தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச்
சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்
துண்ணா துயங்கு மாசிந் தித்து
மொருகை பள்ளி யொற்றி யொருகை . . . .[75]
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
பொருளுரை:
பள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டமும் காட்சியும் போரைப் பற்றிய நினைவு. அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. வேல் பாய்ந்த புண் வலியால் தன் பெண்யானை பற்றிய நினைவு இல்லாமல் கிடக்கும் ஆண்யானை, வெட்டுப்பட்ட சில யானைக் கைகள் பாம்பு பதைப்பது போல் துடித்த காட்சி, அரசனின் வெற்றியை வாழ்த்திக்கொண்டே செஞ்சோற்றுக்கடன் கழித்து மாண்டவர்கள், தோலிலே அம்பு பாய்ந்த வலியால் உணவு கொள்ளாமல் தள்ளாடிச் செவிகளைச் சாய்த்துக்கொண்டு கிடக்கும் குதிரை ஆகியவற்றைச் சிந்தித்துக்கொண்டு, ஒரு கை தன் தலைக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு கையின் விரல் நண்டுக் கொடுக்கு போல் பகைவரைச் சுட்டிய வண்ணம் காட்டிக்கொண்டு அரசன் பள்ளியில் கிடந்தான்.
நகை தாழ்க் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்த பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன்.............. . . . .[77 - 80]
னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி
யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை
யின்றுயில் வதியுநற்............. . . . .[80]
பொருளுரை:
அவன் சுட்டிக்காட்டிய அரசர்கள் அவனது வெற்றியைப் பாராட்டிக்கொண்டு நடுங்கியவண்ணம் நின்றனர்.
நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறைதபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, . . . .[85]
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின................ . . . .[80 - 89]
நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
மையற்? கொண்டு மொய்யென வுயிர்த்து
மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து
பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல . . . .[85]
விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி
யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ
ளஞ்செவி நிறைய வாலின ...................
பொருளுரை:
பாசறையில் இருக்கும் தலைவன் பிரிவால் தலைவிக்கு உறக்கம் வரவில்லை. கவலை மேலிடுகிறது. நெஞ்சை அவனிடம் செலுத்திப் புலம்பும் நீண்ட நினைவோடு தன்னைத் தானே தெற்றிக்கொள்கிறாள். கழன்றோடும் வளையல்களைத் திருத்திக்கொள்கிறாள். என்றாலும் ஆசை விடவில்லை. ‘ஒய்’ எனப் பெருமூச்சு விடுகிறாள். அம்பு பாய்ந்த மயில் போல நடுங்குகிறாள். அணிகலன்கள் கழன்று விழுகின்றன. அருகில் பாவை-விளக்கு ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. இவள் இருக்கும் எழுநிலை மாடத்தின் (ஏழடுக்கு மாளிகையின்) வளைந்த பகுதி ஒன்றில் அருவி கொட்டும் ஓசையைக் கேட்டு நினைவை மாற்ற முயன்றுகொண்டிருக்கிறாள்.
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெருந் தானையொடு, . . . .[90]
விசயம் வெல் கொடி உயரி, வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப ..................... . . . .[89 - 92]
வேண்டுபுலங் கவர்ந்த யீண்டுபெருந் தானையொடு . . . .[90]
விசயம்? வெல்கொடி யுயரி வலனேர்பு
வயிரும் வளையு மார்ப்ப.........................
பொருளுரை:
அருவி ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்த தலைவியின் காதுகள் நிறையும்படி அரசனின் வெற்றி முழக்க ஒலி கேட்கிறது. பகைவரின் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு, அவர்களின் படையையும் தன் படையுடன் செர்த்துக்கொண்டு, வெற்றிக்கொடியை உயர்த்தியவண்ணம் மீள்வோர் சங்கும், கொம்பும் முழங்கும் ஒலி கேட்கிறது.
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழ, . . . .[95]
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களில், . . . .[92 - 100]
செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிறைக் கொன்றை நன்பொன் காலக்
கோடற் குவிமுகை யங்கை யவிழத் . . . .[95]
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கான நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்
றிரிமருப் பிரலையொடு மடமா னுகள
வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் . . . .[100]
பொருளுரை:
காயா அஞ்ச நிறத்தில் (கருநீலம்) பூத்தது. கொன்றை பொன் நிறத்தில் பூத்தது. கோடல் பூ கைவிரல்கள் போல் விரிந்து பூத்தது. தோன்றிப் பூ குருதி நிறத்தில் சிவப்பாகப் பூத்தது. இப்படிப் பூத்திலுக்கும் முல்லை நிலத்தின் வரகுக் கொல்லையில் மான்கள் துள்ளி விளையாடின.
துனை பரி துரக்கும் செலவினர்,
வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. . . . .[101 - 103]
துனைபரி துரக்குஞ் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. . . .[103]
பொருளுரை:
வள்ளிக் கிழங்கு முதிர்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனின் தேர்க்குதிரைகளை தேரோட்டி விரைவாகச் செலுத்துக்கொண்டிருந்தான்.
இந்நூலின் இறுதியில் இரண்டு தனிப்பாடல்கள் உள்ளன. அவை ‘பத்துப்பாட்டு’ என்னும் தலைப்பிட்டுப் பத்து நூல்களைத் தொகுத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டவை. இந்தப் பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. அவை இந்தப் பாட்டுக்கு அமைந்த ஒருவகை விளக்கம்போல் காணப்படுகின்றன.
சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல்
கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து,
குன்று எடுத்து நின்ற நிலை?.......................[1]
சென்றடைந்த நோக்க மினிப்பெறுவ- தென்றுகொல்
கன்றெடுத் தோச்சிக் கனிவிளவின் காயுகுத்துக்
குன்றெடுத்து நின்ற நிலை . . . .[1]
பொருளுரை:
கன்றைக் குணிலாக்கிக்கொண்டு எறிந்து விளாங்கனியை உதிர்த்தும், குன்றைக் குடையாக்கிப் பிடித்தும் நின்ற மாயவனே! ஆய்ச்சி விரிச்சி கேட்டுக்கொண்டு நின்றாளே, அவள் கெட்ட விரிச்சிச்சொல் நிறைவேறப்போவது என்றோ? நீயே அறிவாய்.
துனையும் துனைபடைத் துன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாராமுன்னம்,
கடல் முகந்து வந்தன்று, கார்!........................[2]
துனையுந் துனைபடைத் துன்னார்- முனையுள்
அடன்முகந்த தானை யவர்வாரா முன்னம்
கடன்முகந்து வந்தன்று கார் . . . .[2]
பொருளுரை:
பகைவர் படையை வென்று அவர் படையையும் தன் படையுடன் சேர்த்துக்கொண்டு, தன் தேரில் பூட்டிய பொன்னணிக் குதிரையைத் தூண்டி ஓட்டிக்கொண்டு மீண்டு வருவதற்கு முன்பு கார்காலம் வந்துவிட்டது.