புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 085

யான் கண்டனன்!


யான் கண்டனன்!

பாடியவர் :

  பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.

பாடப்பட்டோன் :

  சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.

திணை :

  கைக்கிளை.

துறை :

  பழிச்சுதல்.


பாடல் பின்னணி:

சோழ மன்னன் ஆமூர் மல்லனுடன் போர் புரிவதை நக்கண்ணையார் கண்டார். அவன் வெற்றி அடைந்ததைக் கண்டார். மகிழ்ந்து இவ்வாறு அவர் கூறுகின்றார்.

என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்,
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்,
ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே,
ஆடன்று என்ப ஒரு சாரோரே,
நல்ல பல்லோர் இரு நன் மொழியே, . . . . [05]

அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே.

பொருளுரை:

என்னுடைய தலைவனுக்கு இது ஊர் இல்லையாயினும், என் தலைவனுக்கு இது நாடு இல்லையாயினும், அவன் வெற்றியடைவான் எனக் கூறுவார்கள் ஒரு சிலர். அவன் வெற்றியடைய மாட்டான் என்பார்கள் ஒரு சிலர். பலர் கூறும் சொற்களும் நல்லவையே ஆகும். அழகிய சிலம்புகள் ஒலிக்க, நான் ஓடி, எங்கள் மனையின்கண் உள்ள, முழவைப்போன்ற அடியையுடைய பனை மரத்தில் பொருந்தி நின்று, அவன் வெற்றியடையதலைக் கண்டேன்.

குறிப்பு:

நல்ல (5) - உ. வே. சாமிநாதையர் உரை - இகழ்ச்சிக்குறிப்பு. என்னை, என் ஐ - அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).

சொற்பொருள்:

என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் - என்னுடைய தலைவனுக்கு இது ஊர் இல்லையாயினும், என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் - என் தலைவனுக்கு இது நாடு இல்லையாயினும், ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே - அவன் வெற்றியடைவான் எனக் கூறுவார்கள் ஒரு சிலர், ஆடன்று என்ப ஒரு சாரோரே - அவன் வெற்றியடைய மாட்டான் என்பார்கள் ஒரு சிலர் (சாரோரே - ஏகாரம் அசைநிலை), நல்ல பல்லோர் இரு நன் மொழியே - பலர் கூறும் சொற்களும் நல்லவையே ஆகும் (மொழியே - ஏகாரம் அசைநிலை), அம் சிலம்பு ஒலிப்ப ஓடி - அழகிய சிலம்புகள் ஒலிக்க நான் ஓடி, எம் இல் முழா அரைப் போந்தை பொருந்தி நின்று - எங்கள் மனையின்கண் உள்ள, முழவைப்போன்ற அடியையுடைய பனை மரத்தில் பொருந்தி நின்று, யான் கண்டனன் - நான் கண்டேன், அவன் ஆடாகுதலே - அவன் வெற்றியடையதலை (ஆடாகுதலே - ஏகாரம் அசைநிலை)