புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 091

எமக்கு ஈத்தனையே!


எமக்கு ஈத்தனையே!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை :

  தும்பை.

துறை :

  வாழ்த்தியல்.

பாடல் பின்னணி:

தன்னுடைய நாட்டில் ஒருமுறை அதியமான் உயர்ந்த மலைப்பிளவு ஒன்றில் உள்ள நெல்லி மரத்தின் இனிய கனி ஒன்றைப் பறித்துக்கொண்டு வந்தான். அதை உண்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என அறிந்தான். தான் அதை உண்ணாது, ஒளவையாருக்கு அதைக் கொடுத்தான். அவனைப் புகழ்ந்து ஒளவைப் பெருமாட்டி இயற்றிய பாடல் இது.

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி . . . . [05]

நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே தொன் நிலைப்
பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச் . . . . [10]

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.

பொருளுரை:

வெற்றி மிகுந்த குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போரில் தோற்கும்படி வென்ற, கழல விடப்பட்ட வீர வளையல்களை அணிந்த பெரிய கைகளையும், ஆரவாரத்தைச் செய்யும் கள்ளையுமுடைய அதியர் தலைவனே! போரில் பகைவரைக் கொல்லும் மறச் செல்வத்தை உடையவனும், பொன்னால் செய்யப்பட்ட மாலையையும் அணிந்தவனுமான நெடுமான் அஞ்சியே! பால் போன்ற பிறை நிலா நெற்றியில் பொலியும் தலையையும், நீலமணியைப் போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவனைப் போல நீ நிலைபெறுவாயாகப் பெருமானே! பழைய நிலைமையுடைய பெரிய மலையின் பிளவில் உள்ள, ஏறுவதற்கு அரிய உச்சியில் உள்ள, சிறிய இலையையுடைய நெல்லி மரத்தின் இனிய கனியைப் பெறுவதற்கு அரிது என்று கருதாது, அதனால் வரும் பயனை அறிந்தும் அதை என்னிடம் கூறாது உனக்குள்ளேயே வைத்து, சாதல் நீங்க எனக்கு அதை அளித்தாயே!

சொற்பொருள்:

வலம்படு வாய்வாள் ஏந்தி - வெற்றியுண்டான குறி தவறாத வாளை எடுத்து, ஒன்னார் களம் படக் கடந்த - பகைவர்கள் போரில் தோற்கும்படி வென்ற, கழல் தொடி தடக்கை - கழல விடப்பட்ட வீர வளை அணிந்த பெரிய கை, ஆர்கலி நறவின் அதியர் கோமான் - ஆரவாரத்தை செய்யும் கள்ளையுடைய அதியர் தலைவனே, போர் அடு திருவின் - போரில் கொல்லும் மறச் செல்வத்தையும், பொலந்தார் அஞ்சி - பொன்னால் செய்யப்பட்ட மாலையை அணிந்த அஞ்சியே, பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி - பால் போல் பிறை நெற்றியில் பொலியும் தலை (புரை - உவம உருபு), நீலமணி மிடற்று ஒருவன் போல - நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவன் போல, மன்னுக பெரும நீயே - நிலைபெறுவாயாக பெருமானே நீ, தொன் நிலைப் பெருமலை விடர் அகத்து - பழைய நிலைமையுடைய பெரிய மலைப் பிளவில் உள்ள, அரு மிசை கொண்ட - அரிய உச்சியில் உள்ள, சிறியிலை நெல்லித் தீங்கனி - சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனி (சிறியிலை - சிறிய இலை அல்லது சிற்றிலை என்பதன் திரிபு), குறியாது ஆதல் - பெறுவதற்கு அரிது என்று கருதாது, நின் அகத்து அடக்கி - உனக்குள்ளேயே அந்த உண்மையை வைத்து, சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே - சாதல் நீங்க எனக்கு அளித்தாயே (ஈத்தனையே - ஏகாரம் அசைநிலை)