நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 016

பாலை


பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது.

புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு
உரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் . . . .[05]

ஓடு மீன் வழியின் கெடுவ; யானே,
விழுநீர் வியலகம் தூணிஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்; . . . .[10]

எனைய ஆகுக! வாழிய பொருளே!
- சிறைக்குடி ஆந்தையார்.

பொருளுரை:

என் நெஞ்சமே! நெடுங்காலம் வாழ்வாயாக!; நீ இப்பொழுது கருதிய பொருளோ யாம் தலைவியைப் புணர்ந்து இல்லத்துத் தங்கிய வழி அடையப் பெறுவதொன்றன்று; இதனைவிட்டுப் பொருள்வயிற் பிரிந்தாலோ இவளைப் புணரும் புணர்ச்சி இனி அடையப்பெறுவதொன்றன்று; ஆதலின் இவ்விரண்டினையுஞ் சீர்தூக்கிப் பொருள்வயிற் பிரிந்தாயானாலும் பிரியாதிவ்வழி யிருந்தாயானாலும் இவற்றுள் நல்லதொரு காரியத்தைச் செய்தற்குரியை ஆவாய்; ஆயினும் யான் அறிந்த அளவில் பொருள்கள் வாடாத மலரையுடைய பொய்கையிடத்து ஓடுகின்ற மீன் செல்லும் நெறியே போலத் தாமிருந்த விடமும் தெரியாமற் கெடுவனகாண்; யானோவெனில் பெரிய கடல் சூழ்ந்த அகன்ற நிலனே அளக்கு மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் வரையில் மாட்சிமைப்பட அளக்கத்தக்க பெரிய நிதியைப் பெறுவதாயினும், அந்நிதியை விரும்பேனாகி; இக் கனவிய குழையையுடையாளுடைய மாறுபட்ட செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்கள் பொருந்தி இனிதாக நோக்கும் நோக்கத்தாற் செகுக்கப்பட்டேனாதலின் நின்னொடு மோதற்கு வாரேன்காண்!; இனி அப்பொருள் எத்தன்மையவாயினும் ஆகுக! அவை போற்றுவார்மாட்டு வாழ்வனவாகுக!