நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 042

முல்லை


வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், . . . . [05]

'ஏகுமின்' என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ . . . . [10]

அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.
- கீரத்தனார்.

பொருளுரை:

பாகனே! நீரின்மையாலே கோடையில் பல நாளாக வறட்சியுற்ற உயிர்கள் மகிழ்ச்சியோடு தத்தந் தொழிலை மேற்கொண்டு நிகழ்த்துமாறு; தொன்று தொட்டுப் பெய்யும் வழக்குப் போல மழை பெய்ததனாலாய புதிய நீர் நிரம்பிய பள்ளங்கடோறும் நாவினால் ஒலிக்கின்ற பலவாய கூட்டத்தையுடைய தவளைக ளொலித்தலானே; நாம் செல்லுகின்ற தேரிற் கட்டிய மணிகளின் ஒலியை ஒள்ளிய நுதலையுடைய நம் தலைவி கேட்டறிந்திலள்; ஆதலின் நீயிர் முன்னே சென்று கூறுமினென்றபடி அக்கட்டளையை ஏற்ற இளையோர் விரைந்து நமது மாளிகையிற் புகுந்து அறிவித்தனராக; உடனே மெல்ல அதுகாறுஞ் சீவிக்கை செய்யாத கூந்தலின் மாசு போகத் தூநீராடிச் சிலவாய மலரைக் கொண்டு பலவாய கூந்தலிலே முடிக்கின்ற அத்தறுவாயில் யான் உள்ளே புகுதலின்; என்னை நோக்கித் தன் மெய்துவள வந்து அவிழ்ந்து குலையு முடியினளாய் என்னை அணைத்துக் கொண்ட, மடம் மா அரிவை மகிழ்ந்து அயர் நிலை மறத்தற்கு அரிது மடப்பத்தையுடைய சிறந்த நம் அரிவை மகிழ்ந்து கொண்டாடுந் தன்மை யான் மறத்தற்கரியதுகாண்; அத்தகையாள் இன்றும் மகிழ்ந்தணைக்குமாறு விரைவிலே தேரைச் செலுத்துவாயாக!