நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 396

குறிஞ்சி


தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.

பெய்து போகு எழிலி வைகு மலை சேர,
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை . . . . [05]

பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே - பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி . . . . [10]

ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே?
- ஆசிரியர் அறியப்படவில்லை.

பொருளுரை:

மழையைப் பெய்தொழிந்து செல்லும் மேகமெல்லாம் தாம் முன்ப தங்கியிருந்த மலையின்கண்ணே சென்று தங்காநிற்ப; தேனிறால் தூங்குகின்ற உயர்ந்த வெற்பினின்று அருவி ஆரவாரித்து வீழாநிற்ப; வேங்கைமரங்கள் மலர்ந்த அழகிய மலையில் நல்ல நாட்காலைப் பொழுதிலே பொன்போன்ற பூக்களையுடைய கிளையிலிருந்து அளாவி; நறுமணம் வீசும் மகரந்தத்தில் அளைந்த அழகு பெற்ற மயில்; பசிய கற்பாறையி னுச்சிமீது தன் கூட்டத்தோடு கூடி; ஆதித்தனது மிக்க கதிரையுடைய இளவெயிலைத் துய்க்கின்ற மலைநாடனே! நினது மார்பினால் வருத்தப் பெற்ற இன்னாமை நீங்குதற்கரிய காமநோயை யான் யாரிடத்து நொந்து கூறாநிற்பேன்? நீ வந்து புணரும் பல நாளும் மிக இனிய வார்த்தைகளை யான் விரும்பும்படி சொல்லி இங்ஙனம் கூறியவழி நடத்தல் இவட்குக் காப்புடைத்தாகுமென்று அருளாயாய்; நீ மயக்கமுறாநின்றனை; இதனை யான் யார்க்கு நொந்து கூறாநிற்பேன்.