நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 308

பாலை


நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.

செல விரைவுற்ற அரவம் போற்றி,
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி . . . . [05]

வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் . . . . [10]

பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.
- எயினந்தை மகன் இளங்கீரனார்.

பொருளுரை:

ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி; நாம் பொருள்வயிற் பிரிந்து செல்லுதலின் விரைவால் உண்டாகிய சொல்லை விரும்பிக் கேட்டு; குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணில் நீரை வடியவிடுதலும்; அதனை யாம் அறிந்து இஃதென்னென்று அவளைப் பலபடியாகப் பாராட்டி வினாவவும் அதற்கு விடை கூற நாணினளாகி வருபவள்; யாம் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றனை யென்று வினவாமலும் போகலை என்று தடாமலும் இருக்குந் தன்மையளாய்; மணங் கமழ்கின்ற நெருங்கிய குழல் முடியாகிய கொண்டை விளங்க நல்ல சித்திரத் தொழிலமைந்து இயக்கும் இயந்திர மற்றழிந்த பாவை ஒன்று எம்மீது விழுந்தாற்போலக் கலங்கி நெடும் பொழுது நினைந்து நின்று பின்பு எம்முடம்பின் மீது சாய்ந்து விழுந்தனள்; அவ்வண்ணம் விழுதலும் அதனை நோக்கிய ஈரிய மண்ணாற் செய்யப்பட்டு ஈரங்காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அஃது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழியுமன்றே அப்படிப் போல; பொருள்வயிற் பிரியக் கருதிய எமது நெஞ்சம் அவளுடன் ஒன்றுபட்டுக் கரைந்து வேறுபாடின்றி அடங்கிற்றுமன், ஆதலின் இனிப் பிரிவதுதான் எவ் வண்ணமாகும்?